நண்பர்களே! புதிய இணையதளம் ஒன்று துவங்க உள்ளதால் இந்த வலைப்பூவில் ஆரம்பித்த இந்த தொடர்கதையை இதிலேயே முடிக்கும் ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. கதையில் மாற்றம் இல்லை இது தான் முடிவு.
தேவதை வாக்கு பலிக்குமா? நீ சொன்னது போலே இருவரும் ஒரே கல்லூரியில் சேர்ந்தோம். அப்படி சொல்வதை விட நான் சேர்ந்த கல்லூரியில் நீயும் அதிக மதிப்பெண் எடுத்தாலும் வந்து சேர்ந்தாய். நம் ஊருக்கு அருகிருப்பதால் உன் அப்பா சம்மதிக்க. நம் காதலை கல்லூரிக்கு பத்திரமாக கொண்டு சென்றோம் இருவரும். கல்லூரிக்கு ரயில் பயணம். அவசரத்தில் ஓடி வரும் உனக்காக நான் காத்திருந்தாலும் ரயில் காத்திருக்காத அந்நாட்களில் பேருந்தில் சேர்ந்து பயணித்தோம். பயணத்தில் பின்நோக்கி ஓடும் மரங்கள், உன்னை நோக்கி ஓடும் மனம். தினம் சன்னலோர இருக்கைக்காக சண்டை போடுவாய். ஊடலில்லாமல் காதலா? உன்னோடு சண்டையிட்டு வேண்டுமென்றே தோற்று உன் அருகில் அமர்வேன். வென்ற பரவசத்தில் உன் கண்களில் சின்ன மின்னல்கள் மின்னி மறையும். எனக்கு ரயிலோடு பயணங்கள் இல்லை அந்த நாட்கள், ஒரு மயிலோடு பயணம்.
If you enjoyed this post, make sure you subscribe to my RSS feed!
